இப்ப தொலைக்காட்சி, வலையகம் மற்றும் செய்தித்தாள் என எதை திறந்தாலும் கண்ணில் படுவது சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீடு (foreign direct investment in retail sector) பற்றிய செய்திகள்தான். எத்தனைதான் கழுதை கத்து கத்தினாலும் கண்டிப்பாக வரப்போகும் ஒன்றுதான், எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் மதிய அரசு ஒருபோதும் பின் வாங்கப்போவதில்லை, ஆள்வோர் யாராக இருந்தாலும் அது காங்கிரஸ், பீ ஜே பீ அல்லது இடது சாரியாக இருந்தாலும் கண்டிப்பாக வந்தே தீரும், இப்போது வன்மையாக வால்மார்ட் போன்ற அந்நிய நிறுவனங்களை எதிர்க்கும் கம்யுனிஸ்டுகள் கூட அவர்கள் கடை திறந்ததும் நன்கொடைக்கு அவர்களிடம் உண்டி குலுக்கப்போவது உண்மை. ஏற்கனவே வங்கி காப்பீடு என அனைத்து துறைகளிலும் அந்நிய நிறுவனங்களை அனுமதித்தாகி விட்டது. சில்லறை வணிகத்துக்கு மட்டும் ஏன் இவ்வளவு எதிர்ப்பு, சில்லறை வணிகத்தில் ஈடு பட்டுள்ள சாமானியர்களின் எதிர்காலம் கேள்வி குறியாக்கப்பட்டதே முக்கிய காரணம் என்கிறார்கள். ஆதரிப்போர் இடைத்தரகர்களின் ஆதிக்கம் ஒழிக்கப்பட்டு விவசாயிகளுக்கு அவர்களின் உற்பத்தி பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க இந்த மாதிரியான நிறுவனங்களின் வரவு வழி வகுக்கும் என வாதிடுகிறார்கள். என்னைப்பொருத்த வரை விவசாயிகள் பயனடைவார்கள் என்பது தவறான வாதம் என்றே கருதுகிறேன். ஏனென்றால் வால்மார்ட் போன்ற பெரு நிறுவனங்களின் தரக்கட்டுப்பாடு என்ற பெயரில் அவர்கள் விதிக்கும் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு விளைபொருட்கள் உற்பத்தி செய்வது என்பது சாதாரண விவசாயிகளுக்கு குதிரைக்கொம்பு. உதாரணமாக கத்திரிக்காய்-ஐ எடுத்துகொண்டால், சொத்தை கத்திரிக்காய் எல்லோரும் அறிந்த ஒன்று, கிராமத்தில் கத்திரிக்காய் வாங்கும்போது காய்களில் குறைந்தது 25 சதவீதமாவது பூச்சி உள்ளதாக இருக்கும். கத்திரியில் பூச்சிகள் கட்டுபடுத்துவது என்பது கடினமானது, அப்படி பூச்சி பட்டுள்ள காய்களை பெரு நிறுவனங்கள் தரக்கட்டுப்பாடு என்னும் பெயரில் ஒதுக்கி விடும், ஆனால் உள்ளூர் நிறுவனங்கள் வாங்கும்போது அவ்வாறு தரம் பிரிப்பதில்லை. சில மாதங்களுக்கு முன் திருவனந்தபுரத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள், ரிலையன்ஸ் நிறுவனம் அவர்களிடம் வாங்கும் தக்காளியில் தரக்கட்டுப்பாடு என்று கூறி பாதிக்கும் மேல் கழித்து விடுவதாகவும் அவை வீணாகுவதாகவும் கூறி போராட்டம் நடத்தினார்கள்.
இவ்வாறு பூச்சிகள் இல்லாமல் காய்கறிகளை உற்பத்தி செய்ய உழவன் அதிகப்படியான பூச்சிகொல்லிகளை உபயோகிக்க முற்படுவான், அதன் மூலம் உற்பத்தி விலை ஏறுவதுடன் நுகர்வோருக்கு பூச்சிகொல்லிகள் நிறைந்த காய்கள் கிடைக்க வாய்ப்புகள் அதிகம். எங்கள் பண்ணைக்கு அருகில் ஒரு விவசாய பண்ணை உள்ளது அதில் பணிபுரியும் பெரும்பாலானவர்கள் நம் ஊர்காரர்கள், அவர்களிடம் ஏன் பாண்டா, carrefour போன்ற நிறுவனங்களுக்கு விற்பதில்லை என்று கேட்டேன், அவர்கள் சொன்னது தரக்கட்டுப்பாடு என்ற பெயரில் கழித்து கட்டி நமக்கு ஒன்றும் மிஞ்சாமல் செய்து விடுவார்கள் என்பதுதான். பெரு நிறுவனங்கள் நம்மூர் contract farming கோழி நிறுவனங்கள் போல் முடிந்தவரை உழவனிடம் கொள்ளை அடிக்கத்தான் பார்க்கும்.
சுருங்க சொன்னால் வேட்டி தலப்பா கட்டி வந்த இடைத்தரகர்கள் கோட் சூட் போட்டு வந்து உழவனின் கோவணத்தையும் உருவி செல்ல போகிறார்கள்.
கரையான்